Wednesday, November 29, 2006

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் பகுதி 1


"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" இது ஆன்றோர் வாக்கு. இந்த தாயும் தந்தையும் நாம் காண்கின்ற முதல்வர்கள்.

நாம் குடியிருந்த கோயில் எம் தாய் தந்தையர். அவர்களையே பிறந்தவுடன் காண்கிறோம். மற்றவர்கள் எல்லாம் பிறகு வந்தவர்கள். அப்படி முதன் முதலில் காண்கின்ற எம் மாதா பிதாக்களை தெய்வமாக மதித்து வணங்குதல் பல்லாண்டு காலம் இம்மண்ணில் நிலவி வரும் பண்பாடாகும்.

"தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை." இதுவும் முதுமொழி. தாயும் தந்தையும் எம் இரு கண்கள் போன்றவர்கள். கண்கள் இல்லாவிட்டால் ஒருவனது வாழ்வில் எத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றன. மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் தாய் இல்லாமல் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. தாயே எமக்கு மூலாதாரம். தந்தையே ஜீவாதாரம். அப்படிப்பட்ட இந்தத் தாயின் அன்பு இருக்கிறதே, அது உலகின் எந்த அன்புக்கும் ஈடாகாது. அதனால்தான் தாயை முன்னுக்கு வைத்து மாதா,பிதா, குரு,தெய்வம் என்று போற்றுகின்றார்கள்.

பண்டைக் காலத்திலிருந்தே எம் கலாச்சாரத்தில் இன்றும் சில நம் பெற்றோர்கள் எம்மைப் பெறுவதற்காக அநேக தான தருமங்கள் செய்து தமது உடல் இளைத்துப் போகும்படி விரதமிருந்தும் பலனளிக்காது போகும் பட்சத்தில் தம் பாதங்கள் கல்லிலும் முள்ளிலும் அடிபட யாத்திரை மேற்கொண்டு கோயில்கள்,தீர்த்தங்கள் பலவற்றையும் தரிசித்து வருகின்றார்கள். இப்படியெல்லாம் அந்த இலட்சியத் தாய் தந்தையர் சிரமப்பட்டு தவம் இருந்து கர்ப்பம் உண்டான பின் தாய் மிகக்கவனத்தோடு எம்மைத் தன் மணி வயிற்றில் பத்து மாதங்கள் சுமந்து படாத பாடு படுகிறாள். குழந்தைக்காகத் தன் உயிரையும் துச்சமென மதிக்கிறாள் எம் அன்னை....."

No comments: